அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு... கனடா பிரதமர் மீண்டும் கருத்து!
ஒட்டாவா: டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்து உள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் கனடா துணை நிற்கும் என கூறியுள்ளது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அவர் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இந்தியா இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துகூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி, கவலை அளிக்கிறது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க, கனடா எப்போதும் துணை நிற்கும்' என்றார்.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, கனடா அமைச்சர்கள் சிலரும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்த இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் 'உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என, தெரிவித்தது.
மேலும் இந்தியாவுக்கான கனடா தூதர் நதிர் படேலுக்கு, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதுடன் கனடாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் பாதிக்கப்படலாம் எனவும் இந்தியா கூறி இருந்தது. இவ்வாறு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையிலும் அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் கனடா அவர்களுக்கு துணை நிற்கும் என கனடா பிரதமர் மீண்டும் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தனது கருத்தில் உறுதியாக உள்ள பிரதமர் ட்ரூடோ, 'கனடா எப்போதும் அமைதியான எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான உரிமைக்காக எழுந்து நிற்கும். பேச்சுவார்த்தை நோக்கிய நகர்வுகளைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.இந்தியாவின் கடும் கண்டனத்துக்கு மத்தியிலும் கனடா பிரதமர் இவ்வாறு கூறி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.