கனடா வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெருமிதம்!
டொரான்டோ(கனடா): கனடியன் தமிழ் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் தெருவிழாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு தமிழர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
மூன்றாவது தமிழ் தெருவிழா, டொரான்டோ நகரில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பல்வேறு இசை, நடனக் குழுக்கள் வருகை தந்திருந்தனர். பாரம்பரிய மற்றும் நவீன இசை நடனங்கள் மற்றும் ஃப்யூசன் என வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. தெருவெங்கும் இருந்த பலதரப்பட்ட உணவங்கள் தெருவிழாவின் முக்கிய அம்சமாகும்.
டொரான்டோ மேயர் ஜான் டோரி விழாவை தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பிரதமர் பேசும் போது, "1980 களின் தொடக்கத்தில்தான் தமிழர்கள் கனடாவுக்கு முதல் முதலாக வந்தார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் கனடாவின் பல் இன சமூகத்தில் முக்கிய அங்கம் வகித்து, நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் பங்காற்றியுள்ளார்கள்," என்று குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுத் திங்கள்' என்று கனடா அரசு சிறப்பித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அகதியாக வந்து இறங்கிய படகு ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த படகில் ஏறி பார்வையிட்டார். அங்கே கூடியிருந்த தமிழர்கள் உணர்ச்சிமயமாகி விட்டார்கள்.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய கனடியன் காங்கிரஸ் தலைவர் டாக்டர் சாந்தகுமார், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உணவுகளின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக 'தமிழ் தெருவிழா' நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாமல், பெருவாரியாக கனடியர்களும் பங்கேற்றார்கள். டொரோன்டா மட்டுமல்லாமல் கனடா முழுவதிலுருந்தும் மக்கள் பங்கேற்கும் வகையில் 'தமிழ் தெருவிழா' முக்கிய விழாவாக உருவெடுத்துள்ளது.
- இர தினகர்