கனடா தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது லிபரல் கட்சி- புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு மோடி வாழ்த்து!
ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவ லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் ஜஸ்டின் ரூடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தின் 338 எம்.பி. இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியை சந்தித்தனர். தற்போது வரை மொத்தம் 99 இடங்களைத்தான் அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆனால் கடந்த தேர்தலில் வெறும் 34 இடங்களைக் கைப்பற்றியிருந்த லிபரல் கட்சியோ இம்முறை பயங்கர விஸ்வரூபமெடுத்திருக்கிறது. மொத்தம் 181 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி.
கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை. தற்போது பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்க்ளைக் கைப்பற்றி அக்கட்சியின் தலைவரான 43 வயதே ஆகும் ஜஸ்டின் ரூடோ புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பியரே ரூடோவின் மகன் ஆவார்.
கனடாவின் புதிய பிரதமராகும் ஜஸ்டின் ரூடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கனடாவில் தாம் ஜஸ்டின் ரூடோவை சந்தித்து குறித்தும் நெகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
Congratulations @JustinTrudeau for victory in Canadian parliamentary elections!
— Narendra Modi (@narendramodi) October 20, 2015
ஒரே ஒரு ஈழத் தமிழர் வெற்றி
இந்த தேர்தலில் 6 ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இதில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான ராதிகா சிற்சபை ஈசன் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதேபோல் சாந்திக்குமார், செந்தி செல்லையா, ரோஷான் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர்.
18 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி
இத்தேர்தலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் பஞ்சாபியர்களே அதிகம்.
இதில் 18 பேர் வென்று எம்.பி.க்களாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள லிபரல் கட்சியினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.