இந்திய அணு உலைகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்கும் கனடா
ஒட்டாவா: இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு யுரேனியம் வழங்கும் ஒப்பந்தம் இந்தியா-கனடா இடையே கையெழுத்தாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கனடா சென்றார். முன்னதாக 1973ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கனடா சென்றார். அதன் பிறகு 42 ஆண்டுகள் கழித்து கனடா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி ஆவார்.
கனடாவில் மோடி அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் முன்னிலையில் இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு யுரேனியம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கேம்கோ மற்றும் இந்திய அணு சக்தி கமிஷன் ஆகியவை இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரூ.1,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்படி கனடா இந்தியாவுக்கு 3 ஆயிரம் டன் யுரேனியம் வழங்க உள்ளது. இந்த யுரேனியத்தை 2020ம் ஆண்டு வரை வழங்கும்.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கனடா முக்கிய பங்காற்றும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
யுரேனியம் பெறுவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் அணு சக்தி விவகாரத்தில் கனடா, இந்தியா இடையேயான உறவில் புதிய சகாப்தம் துவங்கியுள்ளது. இது 2 நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை காட்டுகிறது. கனடா மக்கள் இந்திய விசாவை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். தீவிரவாத்திற்கு எதிரான போரில் இருநாடுகளும் சேர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.