குறட்டை சத்தம் தாங்க முடியல.. கோர்ட் வரை சென்ற வீட்டின் ஓனர்!
சத்தமாக குறட்டை விட்ட பெண்ணின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஒட்டாவா: குறட்டை சத்தம் எல்லா நாடுகளிலும் பிரச்சனைதான் போல.
கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் நிறைய குடும்பங்கள் வசித்து வரும் ஒரு அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவருக்கு தூங்கும்போது ரொம்ப குறட்டை வருமாம்.
டாக்டரை பாரும்மா..
தூங்க ஆரம்பித்தவுடன் இந்த குறட்டை சத்தம் அங்கிருப்பவர்களை ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது. இந்த குறட்டை சத்தத்தை கேட்ட அந்த வீட்டின் ஓனர், "உனக்கு இவ்ளோ சத்தமா குறட்டை வருதே? டாக்டரை போய் உடனே பாரு" என்று அறிவுறுத்தினார். ஆனால் அந்த குறட்டை பெண்ணோ இதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அக்கம்பக்கத்தினர் புகார்
வழக்கம்போல் ராத்திரி நேரங்களில் குறட்டை சத்தம் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் அக்கம்பக்கம் குடியிருந்தவர்களால் தூங்கவே முடியவில்லை என வீட்டின் ஓனரிடம் புகார் செய்ய ஆரம்பித்தார்கள். ஏற்கனவே டாக்டரை போய் பார்க்க சொல்லியும் பார்க்காமல் அலட்சியம் செய்த அந்த குறட்டை பெண் மீது ஓனருக்கு இப்போது இன்னமும் கோபம் வந்துவிட்டது.
குறட்டை பெண்ணும் புகார்
அதனால் ஸ்ட்டிரைட்டா கோர்ட்டுக்கு போய்விட்டார். அந்த குறட்டை பெண்ணை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். உடனே அந்த பெண்ணும், ஹவுஸ் ஓனருக்கு எதிராக, அந்நாட்டு குடியிருப்போர் நல தீர்ப்பாயத்தில் பதிலுக்கு வழக்கு போட்டுள்ளார்.
மன உளைச்சல்
என்னவென்று தெரியுமா? "வீட்டு உரிமையாளர் எப்ப பார்த்தாலும் தொந்தரவு செய்தவதாகவும், அவரது செயலால் தன்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என்றும், அதனால் தனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் அறிவுரை
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், குறட்டை பெண் அளித்த புகாரை மறுத்துவிட்டனர். அதோடு குறட்டை சத்தம் அளவுக்கு அதிகமாகவே கேட்பதாகவும் கூறினர். இறுதியாக, குறட்டைக்கு போய் டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுமாறும் தீர்ப்பு கூறினர். ஒருவேளை குறட்டை சத்தம் நீதிபதிமன்றம் வரை கேட்டிருக்குமோ!!