குழந்தை பிறந்தால் மூளைச்சாவு அடைந்த மனைவி இறந்துவிடுவாளே: கணவன் கண்ணீர்
ஒட்டாவா: கனடாவில் மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த உடன் அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் அவரது கணவர் தனது பிளாக்கில் சோகத்தை பகிர்ந்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்தவர் டிலன் பென்சன். அவரது மனைவி ராபின் 22 வாரம் கர்ப்பமாக இருக்கையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து வயிற்றில் உள்ள குழந்தை 34 வாரங்களை அடையும் வரை அதாவது வரும் மார்ச் மாதம் வரை ராபினை உயிருடன் வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்த பிறகு ராபினுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நிறுத்தப்படும்.
இது குறித்து டிலன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
எனக்கு பிறக்கப் போகும் மகனை பார்க்க ஆவலாக உள்ளேன். அவனுக்கு சிறந்த தகப்பனாக இருக்க முயற்சி செய்வேன். ஆனால் அதே சமயம் அவன் பிறந்த அன்று தான் ராபின் இறப்பாள் என்று எனக்கு தெரியும். மூளைச் சாவு அடைந்து குழந்தையை பெற்றெடுப்பது பெரிய கொடுமை என்று தெரிவித்துள்ளார்.