கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ.. பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு!
ஓட்டவா: கனடா நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கனடா பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 21ம் தேதி நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகில் ஜனநாயகம் பாதிப்பில்லாமல், மதிக்கப்படும் நாடுகளில் கனடாவும் ஒரு நாடு ஆகும். உலகம் முழுக்க நாடு இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு கனடாதான் வாழ்வளித்து வருகிறது.
இலங்கை தமிழ் அகதிகள் தொடங்கி சிரியா அகதிகள் வரை கனடாவில் லட்சக்கணக்கில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கான பணிகளை உருவாக்குவதில் கனடா அரசு சமீப காலமாக திணறி வருகிறது. அதேபோல் அரசின் பணத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிநாடு சென்று சுற்றி வருகிறார் என்றும் புகார் உள்ளது.
இந்த நிலையில் கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இன்று கனடா நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கனடா பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 21ம் தேதி நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆவது கஷ்டம் என்று கூறுகிறார்கள். நாளையில் இருந்து கனடாவில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளது.
அகதிகள் பிரச்சனை, பொருளாதார சரிவு, வெளிநாட்டு உறவு, காலநிலை மாற்றம் ஆகியவை அந்நாட்டு தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் 4 வருடத்திற்கு ஒருமுறை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.