கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி!
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார்.
Recommended Video
15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பினார். அவ்வாறு திரும்பிய நாள் முதல் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின்படி அவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.
தனிமை
அந்த முடிவுகள் வரும் வரை சோபி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து சோபியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து ஜஸ்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துரதிருஷ்டவசமாக எனது மனைவி சோபிக்கு கொரோனா உள்ளது.
ஜஸ்டின்
அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார். இதையடுத்து ஜஸ்டினுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக ஜஸ்டின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நன்றி
இந்த நிலையில் சோபி கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சோபியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் நன்றாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலவிரும்பிகளுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாட்டு மக்கள்
கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பேர் குணமடைந்துவிட்டார்கள். கொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.