சோமாலியா அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவத்தினர் உள்பட 12 பேர் பலி
மொகதிஷு: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவில் அதிபரின் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகைக்கு வெளிப்பகுதியில் உள்ள வாசல் அருகில் நேற்று திடீரென வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில், அருகில் உள்ள இரு ஓட்டல்கள் கடுமையாகச் சேதமடைந்தன. குண்டு வெடித்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 12 பேர் பலியாகினர். ஓட்டலில் இருந்த அமைச்சர் ஒருவரும், வானொலி ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வானொலியில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பையினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.