திருடிய காருக்குள் மாட்டிக் கொண்ட திருடன்.. தைரியமாக உதவிக்கு போலீசையே அழைத்த சம்பவம்!
திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு திருடன் போலீசையே அழைத்த சுவாரஸ்யமான சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது.
ஆஸ்லோ: எதிர்பாராதவிதமாக காருக்குள் சிக்கிக் கொண்ட திருடன் ஒருவன், உதவிக்கு போலீசையே அழைத்த சுவாரஸ்யமான சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது.
சமீபத்தில் போலீஸ் துரத்தியதால் கிணற்றில் குதித்து தப்பிக்க நினைத்த திருடனை, சில நாட்களுக்குப் பின் போலீசாரே மீட்டு கைது செய்த சம்பவம் நம் நினைவில் இருக்கலாம். இதே போன்ற சம்பவம் ஒன்று நார்வேயிலும் நடந்துள்ளது. இங்கு கிணறு என்றால் அங்கு கார்.
நார்வேயின் ட்ரோந்தலக் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றைத் திருட முயற்சித்துள்ளார் 17 வயதான இளைஞர் ஒருவர். ஆனால், எதிர்பாராதவிதமாக கார் லாக் ஆனதால் அவர் உள்ளேயே சிக்கிக் கொண்டார். காருக்குள்ளேயே இருந்தால் மூச்சுத் திணறி செத்துப் போவோமோ என அஞ்சிய அத்திருடன் உடனடியாக போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்த போலீசாரும் அந்த இளைஞரை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், அவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்து, இனி இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.