ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடு- கேட்டலோனியா நடத்திய பொதுவாக்கெடுப்பில் 90% பேர் ஆதரவு!
ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாவதற்காக கேட்டலோனியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 90% பேர் தனிநாடாக பிரிந்து செல்ல வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சத்தால் தனிநாடு கோரி கேட்டலோனியாவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 90% பேர் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பை நடத்த விடாமல் ஸ்பெயின் போலீஸ் நடத்திய கொடூர தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஸ்பெயின் மத்திய அரசின் கீழ் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருப்பது கேட்டலோனியா. 2008-ல் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது கேட்டலோனியா மாகாணமும் மிக மோசமாக பாதிப்படைந்தது.
இதனால் தொழில்துறையில் உச்சத்தில் இருந்த கேட்டலோனியா மாகாணம் படுமோசமான விளைவுகளை சந்தித்தது. அந்த மாகாணம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை பெருகிறது.
ஸ்பெயின் மத்திய அரசின் வஞ்சகம்
ஸ்பெயினின் மற்ற மாகாணங்களை ஒப்பிடுகையில் மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்துகிறது கேட்டலோனியா. ஆனால் ஸ்பெயின் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறைவாக வழங்கி வருகிறது.
கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை
இதற்கு எதிரான போராட்டங்கள் கேட்டலோனியா தனி நாடு கோரிக்கையாக வெடித்தது. 2014-ம் ஆண்டு கேட்டலோனியாவில் தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்தது.
தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு
தற்போது கேட்டலோனியா மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை நேற்று நடத்தினர். ஆனால் இந்த பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதம் என கூறி தொடர்ச்சியாக ஒடுக்குமுறை போலீஸ் கட்டவிழ்த்துவிட்டது.
போலீஸ் ஒடுக்குமுறையில் 400 பேர் படுகாயம்
பொதுவாக்கெடுப்புக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே போலீஸ் ஒடுக்குமுறை உச்சத்தை எட்டியது. இதில் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஆனால் போலீஸ் ஒடுக்குமுறையை மீறி பல லட்சம் பேர் திரளாக வந்து பொதுவாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
பாதுகாத்த தீயணைப்பு துறை வீரர்கள்
அப்போதும் போலீஸ் அடக்குமுறை தொடர்ந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கேட்டலோனியா மாகாண தீயணைப்புத் துறை வீரர்கள், தனிநாடு கோரும் ஆதரவாளர்களுக்கு அரணாக நின்று பாதுகாப்பளிக்க உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.
தனிநாடாவதற்கு 90% பேர் ஆதரவு
இப்பொதுவாக்கெடுப்பில் 42.3% பேர் பங்கேற்றதாகவும் 90% பேர் கேட்டலோனியா தனிநாடாக பிரிந்து செல்வதற்காக ஆதரவாக வாக்களித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஸ்பெயின் மத்திய அரசு நிராகரித்தாலும் ஒருதலைப்பட்சமான தனிநாடு பிரகடனத்தை வெளியிடுவதற்காக கதவுகள் திறந்துவிட்டன என்கின்றனர் கேட்டலோனியா தனிநாடு ஆதரவாளர்கள்.