‘போப் 2–ம் ஜான்பால் ரத்தத்தை திரும்பத் தாருங்கள்’: திருடர்களுக்கு வாடிகன் வேண்டுகோள்
வாடிகன்: திருடிச் சென்ற புனிதப் பொருளை திரும்பத் தாருங்கள் என அதைத் திருடிய திருடர்களுக்கு வாடிகன் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
1978 அக்டோபர் முதல் 2005 ஏப்ரல் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2-ம் ஜான் பால். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை, 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானது மற்றும் வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் எனப் பல சிறப்புகளைப் பெற்றவர் போப் 2-ம் ஜான் பால்.
இவரது ரத்தத்தில் நனைக்கப் பட்ட 'புனித துணித் துண்டொன்று' பெட்டியில் வைத்து பாதுகாக்கப் பட்டு வந்தது. தற்போது சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தற்போது அதனைத் திருப்பித் தந்து விடும் படி, திருடர்களுக்கு வாடிகன் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
புனிதப்பொருள்....
மறைந்த போப் ஆண்டவர் 2-ம் ஜான் பாலின் ரத்தம் தோய்ந்த ஒரு துண்டுத்துணி மிகவும் புனிதமானதாக உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் போற்றப்படுகிறது. விலை மதிப்பில்லாத இந்த புனிதத்துணி, தங்கத்தால் ஆன டப்பாவில் வைத்து கிழக்கு ரோமில் மலைப்பிரதேசமான சான்பீட்ரோ டெல்லா லென்கா என்ற இடத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஓய்வு....
போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போதெல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு...
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் புனிதப் பொருள் வைக்கப் பட்டிருந்த தங்க டப்பாவை திருடர்கள் திருடிச்சென்று விட்டார்கள். திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேண்டுகோள்.....
கத்தோலிக்க கிறிஸ்தவர்களை வேதனையில் ஆழ்த்திய இந்தத் திருட்டுச் சம்பவத்தை அடுத்து, புனிதப் பொருளைத் திருடிச்சென்ற திருடர்கள், அதனை திரும்ப ஒப்படைத்து விடுமாறு வாடிகன் கேட்டுக்கொண்டுள்ளது.