அப்பாடா.. எதிர்பார்த்த மாதிரியே தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம்
Recommended Video
ஜெருசலேம்: ஒருவழியாக, இஸ்ரேல் மற்றும் காஸா முனை பகுதி இனக்குழு நடுவே நடைபெற்ற மோதல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்காங்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸா முனையின் ஷாஜயா பகுதியில், இரு தினங்கள் முன்பு, இரவு நேரத்தில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிக் ஜிகாத் என்ற ஆயுத குழு அமைப்பின் மூத்த தளபதி பஹா அபு அல் அட்டா மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.
இதனால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு கடும் கோபமடைந்தது. இஸ்ரேல் மீது, காஸா முனையிலிருந்து, வரிசையாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது
பதிலுக்கு பதில்
இந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு தடுப்பு சிஸ்டம் மூலமாக பெரும்பாலும் முறியடிக்கப்பட்டன. ஒருசில ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதியிலும், சாலை பகுதியிலும், விழுந்து சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. பதிலுக்கு, இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். பதற்றம் அதிகரித்த நிலையில் எகிப்து நாடு, இந்த விஷயத்தில் தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.
சில தாக்குதல்கள்
இதன் மூலம், இரு நாட்களாக நடைபெற்று வந்த பதற்றம் ஓரளவுக்கு தணிந்து உள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது மிக மோசமான அளவுக்கு செல்லவில்லை என்பது அங்கிருந்து கிடைக்கக்கூடிய நல்ல செய்தியாக உள்ளது.
சண்டை முடிந்தது
எகிப்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனிய குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்களில், இஸ்ரேல் குண்டு வீசுவதை அறிந்து, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் பேசினோம் என்றார். இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே, தனது, ட்விட்டர் பதிவில், காஸாவில் இரண்டு நாள் சண்டை "முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இதன் மூலம், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தினார்.
போர் நிறுத்தம்
எகிப்து பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் காஸா பிரிவுகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. இப்படி பேச்சுவார்த்தை நடத்திதான், கடந்த மே மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலால் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இப்போது எகிப்துதான் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது. பூகோள ரீதியாக வடகிழக்கு ஆபிரிக்காவை மத்திய கிழக்கோடு இணைக்கும், ஒரு நாடு எகிப்து. சன்னி பிரிவு முஸ்லீம்கள் அதிகம். இதன்பிறகு கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லீம்கள் பரவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.