பறந்து கொண்டே பேச அனுமதி.... அமெரிக்க தொலைத் தொடர்பு ஆணையம் பரிந்துரை
வாஷிங்டன்: விமானத்தில் பறக்கும் போது செல்போன் மற்றும் இணையத்தை பயன் படுத்த தொடரும் தடையை நீக்க அமெரிக்க தொலைத் தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. அடுத்தமாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இது குறித்து பரிசீலிக்கப் பட உள்ளது.
3,048 மீட்டர் உயரத்துக்கு மேல் விமானம் பறக்கும் போது, அதில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் பேசவும்,டேப்லெட், கணினிகள் ஆகியவற்றில் அகன்ற அலைவரிசைச் சேவைகளைப் பயன்படுத்தி இணையதளங்களைப் கையாளவும் அனுமதிப்பது குறித்து அமெரிக்க தொலைத் தொடர்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய தொலைத் தொடர்பு ஆணையத் தலைவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ‘நவீன தொழில்நுட்பங்கள் விமானப்பயணத்தின் போது பாதுகாப்புடனும், நம்பகத்தன்மையுடனும் செல்போன் சேவைகளைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கின்றன. எனவே, நமது பழைய காலாவதியாகிவிட்ட கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், பின்னர், அது பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு விடப்படும். ஆனால், விமானம் வானில் ஏறும்போதும், (டேக் ஆப்), தரையிறங்கும் போதும் செல்போன்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.