மனித சிறுநீரில் இருந்து உருவாக்கப்படும் பீங்கான் பாத்திரங்கள்.. சீனப் பெண்ணின் அபார கண்டுபிடிப்பு!
மனித சிறுநீரைக்கொண்டு உருவாக்கப்படும் பீங்கான் பாத்திரங்கள் பிரபலமாகி வருகிறது.
பீஜியிங்: சீனாவில் வடிவமைப்பாளர் ஒருவர் மனித சிறுநீரைக் கொண்டு பீங்கான் பாத்திரங்களை உருவாக்கி வருகிறார்.
ஆசியாவில் பீங்கான் பாத்திரங்களின் பயன்பாடு 8ம் நூற்றாண்டில் இருந்தே தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பீங்கான் பாத்திரங்களை தான் சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆரம்ப காலங்களில் சாம்பல், சோடா மாவு, களிமண் ஆகியவற்றை பயன்படுத்தி தான் பீங்கான் பாத்திரங்களை தயாரித்தனர். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால், கண்ணாடி, லெட், ஆக்சைடுகளை பயன்படுத்தி பீங்கான்களை தயாரிக்க தொடங்கினர். அதுவே இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து:
ஆனால் இந்த முறையில் தயாரிக்கப்படும் பீங்கான்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பீங்கான்களில் பூசப்படும் லெட், ஆக்சைட் போன்றவை உணவில் கலந்து, விஷமாக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
சீனக் கண்டுபிடிப்பாளர்:
எனவே இதனை கருத்தில் கொண்டு, சீனாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் சீனே கிம், மனித சிறுநீரைக் கொண்டு, பீங்கான் பாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் கடந்த ஐந்து மாதங்களில் 280 லிட்டர் சிறுநீர் சேகரித்துள்ளார். அதனை சுத்திகரித்து, ஆவியாக்கி, மீதம் இருக்கும் கருப்பு நிற சாந்தை, பீங்கான் பாத்திரங்கள் செய்ய கிம் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆபத்தில்லை:
ரசாயனங்களை பயன்படுத்தி செய்யப்படும் பீங்கான்களில் உள்ள அதே உட்பொருட்கள் தான், மனித சிறுநீரில் இருப்பதாக கிம் கூறுகிறார். மேலும், இந்த முறையில் செய்யப்படும் பீங்கான் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் கிம் உறுதியளிக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
என்னதான் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை என்றாலும், சிறுநீரில் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதை நினைத்து பார்க்கவே முடியவில்லை என இந்தக் கண்டுபிடிப்பு குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை என்பதால் இனி இதுபோன்ற பாத்திரங்கள் அதிகளவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.