கடலில் மூழ்கிய சிரியா குழந்தை பற்றி மனிதாபிமானமற்ற கார்ட்டூன்.. மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ
பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அஞ்சி அகதிகளாக வெளியேறிய சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த சிறு குழந்தை கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும்வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை பற்றி கேலி சித்திரம் வெளியிட்டதை கண்டித்து, தீவிரவாதிகள் சிலர் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' அலுவலகம் புகுந்து, 12 ஊழியர்களை சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாக உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்களை சம்பாதித்தது. இந்த தாக்குதல் மூலம், உலக அளவில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அறியப்பட்டுவிட்டது.
இந்நிலையில்தான், அப்பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கேலி சித்திரம், இஸ்லாமியர்களை மட்டுமல்லாது, மனித நேயம் கொண்ட அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, ஐரோப்பாவுக்கு தஞ்சமடைய படகில் பயணித்த ஒரு குடும்பம் நீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தின் 3 வயது குழந்தை கவிழ்ந்தபடி கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்துதான், அகதிகளை தங்கள் நாட்டுக்கு வரவேற்க ஐரோப்பிய நாடுகள் பலவும் முன்வந்தன.
அகதிகள் போர்வையில் ஐரோப்பாவுக்குள் தீவிரவாதிகள் நுழையலாம் என்று போப் ஆண்டவர் எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்நிலையில், சார்லி ஹெப்டோ எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போன்ற கார்டூன்களை வெளியிட்டு தனது வெறியை பறைசாற்றியுள்ளது.
ஒரு கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய போட்டோவும் வரையப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கார்டூன் விளக்க குறிப்பு கொடுத்துள்ளது.
மற்றொரு கார்டூனில், "சிரியா குழந்தை கவிழ்ந்து கிடப்பதை போன்ற படத்துக்கு பின்புறத்தில், மெக்டொனால்டு உணவக விளம்பர பலகை ஒன்று மிளிர்கிறது. அதில் "2 குழந்தைகளுக்கான சாப்பாடு இப்போது ஒரு சாப்பாட்டின் விலையில் கிடைக்கிறது" என்று வாசகம் இருப்பதை போல கேலி செய்யப்பட்டுள்ளது.
இந்த கார்டூன்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சார்லி ஹெப்டோ பத்திரிகை, சிரியா நாட்டு குழந்தையின் மரணத்தை கொச்சைப்படுத்திவிட்டது என்று உலகமெங்கிலும் எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது.