இனி நபிகள் நாயகத்தை வரைய மாட்டேன்: சார்லி ஹெப்டோ கார்டூனிஸ்ட்
பாரீஸ்: இனி தான் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து வரையப் போவது இல்லை என்று சார்லி ஹெப்டோ பத்திரிக்கை கார்டூனிஸ்ட் லஸ் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயக்ததை கிண்டல் செய்து கார்டூன்கள் வெளியிட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் புகுந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதல் நடந்த பிறகு வெளியான சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் மீண்டும் நபிகள் நாயகத்தின் கார்டூன் இருந்தது. இந்நிலையில் அட்டைப்படத்திற்காக அந்த கார்டூனை வரைந்த பிரான்சை சேர்ந்த கார்டூனிஸ்டான லஸ் கூறுகையில்,
நபிகள் நாயகம் மீதான ஆர்வம் போய்விட்டது. எப்படி சார்கோஸியின் கார்டூனை வரைந்து களைத்துப்போனேனோ அதே போன்று தான். அதனால் இனிமேல் நபிகள் நாயகத்தின் கார்டூனை வரையப் போவது இல்லை. தீவிரவாதிகள் வெற்றி பெறவில்லை. ஒட்டுமொத்த பிரான்ஸும் பயந்திருந்தால் அவர்கள் வென்றிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு பல முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.