சார்லி ஹெப்டோ தாக்குதலுக்க பழி: தீவிரவாதிகளுக்கு ஹேக்கர்கள் குழு எச்சரிக்கை
பாரீஸ்: சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு பழி வாங்க இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை முடக்கப் போவதாக அனானிமஸ் என்ற ஹேக்கர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டத்தில் 12 பேர் பலியாகினர். இந்நிலையில் பெல்ஜியத்தை தலைமையிடமாகக் கொண்ட அனானிமஸ் என்ற ஹேக்கர் குழுவின் ஆஸ்திரேலிய கிளை யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் தோன்றும் நபர் கை பாக்ஸ் முகமூடி அணிந்து பேசுகிறார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது,
பேச்சு உரிமையை அடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு பெரிய அடி ஆகும். எங்களிடம் இருந்து எதிர்வினையை எதிர்பாருங்கள். இந்த பேச்சு சுதந்திரத்திற்காக தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். தீவிரவாதிகள் அனைவரையும் கண்டுபித்து கொலை செய்வோம். நீங்கள் அப்பாவி மக்களை கொலை செய்கிறீர்கள். அவர்களின் கொலைக்கு நாங்கள் பழி வாங்குவோம்.
எங்கள் ஜனநாயகத்தில் உங்களின் ஷரியாவை அமல்படுத்த விடமாட்டோம். எங்களின் சுதந்திரத்தை உங்கள் முட்டாள்தனம் கட்டுப்படுத்த விட மாட்டோம்.
நாங்கள் அனைத்து தீவிரவாத இணையதளங்கள், அவர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்கப் போகிறோம். உங்களை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம். அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளே ஆபரேஷன் சார்லி ஹெப்டோ துவங்கிவிட்டது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த ஜிஹாதி இணையதளமான ansar-alhaqq.net -ஐ அனானிமஸ் முடக்கியுள்ளது.