அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயரான சென்னைப் பெண்
அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சியாட்டில் : அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தின் துணைமேயராக சென்னைப்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சியாட்டில் மாகாணத்தில், பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல் இயக்குநராக பணியாற்றுபவர் ஷிஃபாலி ரங்கநாதன். 38 வயதான இவர் தற்போது அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது பெற்றோர் பிரதீப் ரங்கநாதன் - ஷெரில். சென்னையில் பிறந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பார்டு பள்ளியிலும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக்கத்திலும் பயின்றவர். 2001ம் ஆண்டு சுற்றுச்சூழலியலில் முதுகலைப்பட்டம் படிப்பதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
ஷிஃபாலியின் இந்த வெற்றி போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், சமூக நீதி, புலம்பெயர்வோர், அகதிகள், பொது சுகாதாரம், மாணவர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளை நிர்வகித்ததற்காகவும் இந்தப் பதவி கிடைத்துள்ளது என்று சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் வகுக்கும் குழுவின் முக்கிய அதிகாரியாக இவர் பணியாற்றி உள்ளார். மேலும் 40 வயதிற்குள்ளாக பிரபலமடைந்த 40 பிரபலங்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிஃபாலியின் திறமையும் கடுமையான உழைப்புமே வெற்றிக்கு காரணம். இவரது இந்த வெற்றியின் மூலம் இந்தியப்பெண்களுக்கு ஊக்கமும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவரது தந்தை பிரதீப் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார்.