ஈரோடு மாவட்ட கிராமங்களில் குளம் குட்டை தூர்வாரும் பணி .. சிகாகோ தமிழர்கள் ஏற்பாடு!
சிகாகோ(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய நகரமான சிகாகோவில் வசிக்கும் தமிழர்கள் முயற்சியில் ஈரோடு மாவட்ட கிராமங்களில் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்கத் தமிழர்களுக்கு தமிழக விவசாயிகள் , மாற்று விவசாயம், நீர் மேலாண்மை உள்ளிட்டவைகளில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சிகாகோவில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து 24 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்திருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 700க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும்.அதில் பங்கேற்ற இளைஞர்கள், தமிழக விவசாயம் காக்க முயற்சியை தொடர வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்தனர்.
நம்பிக்கை விழுதுகள் என்ற அமைப்பு உருவானது. தமிழ் நாடு விவசாயிகளைக் காப்போம் என்ற முழக்கத்தை முன்னிலைப் படுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 10 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள குளம் குட்டைகளை தூர்வாரும் பணியை ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள நிசப்தம் அறக்கட்டளை, கிராம மக்களுடனான மற்றும் உள்ளூர்மட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு, ஜேசிபி உரிமையாளர்களும் கணிசமான தொகையை குறைத்துள்ளனர்.
சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிராம மக்களும் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். நிதியுதவியும் அளித்துள்ளார்கள்.
சிகாகோவில் விழிப்புணர்வு கூட்டம்
தமிழக விவசாயிகளின் தற்போதைய இக்கட்டான நிலைப் பற்றியும் அதற்காக நம்பிக்கை விழுதுகள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் 300க்கும் மேலானோர் பங்கேற்றனர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ர்.என்னென்ன உதவிகள் செய்யலாம் என்று கலந்தாய்வும் நடைபெற்றது
.
சிகாகோ இந்திய தூதரக கன்சலேட் ஜெனரல் நீத்தா பூஷண் வந்திருந்து பாராட்டுகளை தெரிவித்தார்.. தமிழக விவசாயிகளுக்காக சிகாகோ தமிழர்களின் முயற்சி நெகிழ்ச்சியடைச் செய்வதாக கூறினார்.
தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும், நிதி திரட்டுவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் 6ம் தேதி, கிராமிய கலை நிகழ்சிகளுடன் விழிப்புணர்வு பேச்சரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மற்ற கிராமங்களில் இத்தகைய தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்களுடனும் கிராம மக்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர்.
ராஜேஷ், சவடா, பார்த்தி, மணிவண்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். உடன் பதினைந்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சிகாகோ களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-இர தினகர்