தகிக்கும் வெப்பம்... சிக்கன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கூல் ஆகும் பாரிஸ் ஓநாய்
பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் தகித்து வருவதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விலங்கியல் பூங்காவில் சிக்கன் ஐஸ்கிரீம் கொடுத்து விலங்குகளை கூல் செய்து வருகின்றனர்.
இதமான தட்பவெப்பத்துக்கு பெயர்போன ஐரோப்பியாவின் பல நாடுகளிலும், நகரங்களிலும், இப்போது வெப்ப காற்று வீசி வருகிறது. லண்டனில் அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. ஐரோப்பாவின் பல இடங்களிலும் இது 40 டிகிரி செல்சியசை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸில் தற்பொழுது கடும் வெப்பம் நிலவி வருவதால் பல மாவட்டங்களுக்கு செஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கட்கிழமையிலிருந்து பாரிஸ் உட்பட 26 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையிலிருந்து பாரிஸின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பிரான்ஸின் வடபகுதியில் வெப்பம் 38 டிகிரி செல்சியஸாகவும், தென்மேற்குப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பிரான்ஸில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே பூங்காவில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நாய்கள் நீரை விட்டு வெளியேறுவதே இல்லை. அங்குள்ள ஓநாய்களுக்கு சிக்கன் ஐஸ்கிரீம் தருவதாகவும் விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.