பாகிஸ்தானில் தர்பூசணி திருடியதற்காக 2 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
லாகூர்: பாகிஸ்தானில் தர்பூசணி திருடியதற்காக இரண்டு சிறுவர்களை அடித்து நொறுக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரைச் சேர்ந்தவர்கள் பஷாரத், இர்ஃபான். அவர்களின் கடையில் இருந்து தர்பூசணிகளை 2 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிவிட்டனர். 9 மற்றும் 13 வயதாகும் அந்த சிறுவர்களை பஷாரத் மற்றும் இர்ஃபான் கையும், களவுமாக பிடித்து அடித்து நொறுக்கினர். அவர்களுடன் சேர்ந்து அவர்களின் உதவியாளரும் சிறுவர்களை தாக்கினார்.
மேலும் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அவர்களை அப்படியே ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பஷாரத், இர்ஃபான் மற்றும் அவர்களின் உதவியாளரை கைது செய்தனர். சிறுவர்களை கொடுமைப்படுத்தியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.