சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. 10 பேர் சாவு: சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு வாபஸ்!
சாண்டியாகோ: சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் கடலோர பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிலி நாட்டின் இலாபெல் நகரை ஒட்டிய கோகியும்போ கடலோரப் பகுதியை மையம் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நிகழ்ந்த இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் இது 8.3 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சரிந்தன. தலைநகர் சாண்டியாகோவிலும் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓடினர்.
பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்நாட்டின் கடலோர பகுதிகளில், பல அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பியது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.
சிலியிலிருந்து 1,500 கி.மீ தொலைவில் உள்ள அர்ஜென்டினா தலைநகர் பியூனாஸ் அயர்ஸ் நகரிலும் வீடுகள் குலுங்கின. இதற்கிடையே, கடும் நிலநடுக்கம் காரணமாக சிலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரு, ஹவாய் தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகி இருப்பதாக சிலி அரசு தெரிவித்துள்ளது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் துணை உள்துறை அமைச்சர் மகமூத் அலியு அளித்த பேட்டியில், ‘நில நடுக்கம் காரணமாக மத்திய சோபா மாகாணம், இலாபெல் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடலோர பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவிக்கின்றனர். மீட்புப் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது' என்றார். இதற்கிடையே சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, சிலியில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் மக்களை அ்ந்நாட்டு அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகிறது.
இதனிடையே சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.