போர் நிறுத்தம்.. கையில் துப்பாக்கியுடன் சிறார்கள்.. நரம்பு புடைக்க கோஷம்.. காஸாவின் மறுபக்கம்!
காஸா: காஸா நகர சிறுவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நரம்பு புடைக்க கோஷமிடுவது போன்ற புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 7 வாரமாக காஸாவை உலுக்கி வந்த இஸ்ரேல் தாக்குதல் நின்றுள்ள நிலையில் காஸா நகர மக்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு இரு சிறுவர்கள் கைகளில் துப்பாக்கியைப் பிடித்தபடி ஆவேசக் குரல் எழுப்புவது போன்ற புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரம்பு புடைக்க, ஆவேசமாக அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் கையில் இருப்பது மெஷின் கன்.
காஸா தெருவில் காரில்
பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்த தகவல் பரவியதும், காஸா மக்கள் தெருக்களில் வந்து கொண்டாடினர். அப்போது காரில் இரு சிறுவர்கள் துப்பாக்கியுடன் ஆவேசக் குரல் எழுப்பியபடி வலம் வந்தனர்.
துப்பாக்கியே வாழ்க்கை
காஸா மக்களுக்கு துப்பாக்கிச் சண்டையும், குண்டுச் சத்தமுமே வாழ்க்கையாகிப் போய் விட்டது. கடந்த பல வாரங்களாக நடந்து வந்த சண்டை தற்போது ஓய்ந்திருப்பது காஸா மக்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடவுளுக்கு நன்றி
32 வயதான மஹா காலித் என்பவர் கூறுகையில், நானும், எனது குழந்தைகளும் உயிருடன் இருக்கிறோம். இதற்காக கடவுளுக்கு நன்றி. இதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
வீடுகளுக்குத் திரும்பும் மக்கள்
போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், இதுவரை பள்ளிகளில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாட்டம்
காஸா நகரில் பெரும் திரளாக திரண்ட ஆண்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளும் வெடித்துக் கொண்டாடினர்.
2200 பேர் பலி
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 2200 பேர் உயிரிழந்தனர். 10.8 லட்சம் பேர் வீடுகளை விட்டு இடம் பெரும் நிலை ஏற்பட்டது.
நஷ்டம் ஹமாஸுக்குத்தான்
இந்தப் போரால் ஹமாஸுக்கும், பாலஸ்தீனத்திற்கும்தான் பெரும் இழப்புகள் ஏற்பட்டு விட்டன. 2200 பேர் கொல்லப்பட்டனர். 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தரப்பில் 64 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.