காஷ்மீரை போல்.. சீனாவின் உய்குர் முஸ்லிம்களை பற்றி கேட்காதது ஏன்.. இம்ரான் கான் ஷாக் பதில்
போன் (Bonn): சீனா தனது சிறுபான்மையினரை நடத்துவதை பார்த்து உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மோசமான நிலைமைகள் குறித்து அமைதியாக இருக்க விரும்புகிறார். சீனா ஒரு "நல்ல நண்பர்" என்றும் "மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பாகிஸ்தானுக்கு உதவியது" என்றும் இம்ரான்கான் கூறியுள்ளார்.
தங்கள் நாடுகளில் வாழும் சிறுபான்மையினரை ஒடுக்கியதற்காக சீனாவை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன. உய்குர்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தை ஒருவித பலமான போதனைக்கு உட்படுத்தும்படி அனுப்பியதன் மூலமும் சீனா அவர்களை ஒடுக்குகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமைதியாக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா 370 வது பிரிவை ரத்து செய்தபோது, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசியதுடன் ஆவேசமாக பொங்கியது. பிராந்தியத்தில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தது. இம்ரான் கான் தன்னை காஷ்மீர் மக்களின் தூதர் என்று கூட அழைத்துக்கொண்டார்.
பாகிஸ்தான்
இருப்பினும், சீனாவின் முஸ்லிம்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் பாரபட்சமாக நடந்து கொண்டது. அது குறித்து கருத்து கேட்கும்போதெல்லாம், பாகிஸ்தான் பிரதமர் தனது சொந்த நாட்டில் நிறைய நடக்கிறது என்று கூறி அதை ஒதுக்கித் தள்ள முயன்றார். மேற்கு சீனாவில் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்படுவது குறித்து காஷ்மீரைப் போலவே "அதே அளவிலான" கவலையை வெளிப்படுத்தவும் அமெரிக்கா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.
அமெரிக்கா பதிலடி
கடந்த ஆண்டு காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் பிரதமரின் கவலைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க செயல் உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் செப்டம்பர் மாதம் பேசுகையில். " மேற்கு சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களைப் பற்றிய காஷ்மீர் மாதிரியான அதே அளவிலான அக்கறையை நான் காண விரும்புகிறேன், முஸ்லிம்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை காட்டுவது காஷ்மீரை விட பரந்த அளவில் விரிவடைய வேண்டும்., மேலும் ஐ.நா பொதுச் சபையின் போது காஷ்மீரில் நிர்வாகம் மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பதையும், சீனா முழுவதும் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து நிலவும் கொடூரமான நிலைமைகள் குறித்து வெளிச்சம் போட முயற்சிப்பதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள், "என்று தெரிவித்தார். ஆனாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.
உயர்குமர் முஸ்லிம்கள்
இந்நிலையில் ஜனவரி 16 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த டாய்ச் வெல்லே செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் உய்குர் முஸ்லிம்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினை பற்றி விரிவாக பேசினார். ஆனால் சீனாவை பற்றி வாய் திறக்கவில்லை. சீன பிரச்சனை உணர்வு ரீதியலானது என்றும் எனவே சீனர்களுடன் உய்குர் பிரச்சினையை விவாதிப்பதை பாகிஸ்தான் தவிர்க்கிறது என்றும் கூறினார்.
சீனா எங்கள் நண்பன்
ஏன் அவர் உய்குர் முஸ்லீம் பிரச்சினையில் அதிகம் குரல் கொடுக்காமல் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மட்டும் இந்தியாவை மிகவும் விமர்சிக்கிறீர்கள் என்று கேட்டபோது, இம்ரான் கான் பதில் அளித்தார்.. " ஆம். முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.. முதலில், சீனாவில் உள்ள உய்குர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுடன் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால்,.இந்தியாவில் நடப்பது பற்றி தெளிவு இல்லை . இரண்டாவதாக, சீனா ஒரு சிறந்த நண்பராக இருந்து வருகிறது. எனது அரசாங்கம் பெற்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக இது எங்கள் மிகக் கடினமான காலங்களில் எங்களுக்கு உதவியது. எனவே, சீனாவுடனான விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் பேசுகிறோம், பொதுவில் இல்லை, ஏனெனில் இவை முக்கியமான பிரச்சினைகள். " இவ்வாறு கூறினார்.