பாண்டா கரடிக்கு தாதியாய் இருந்தால் 19 லட்சம் சம்பளம் - சீனா அறிவிப்பு
பீஜிங்: கிட்டதட்ட 19 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை தரக் காத்திருக்கின்றது சீனா உங்களுக்கு.அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா?கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை.பாண்டா கரடி ஒன்றிற்கு ஆயா வேலை பார்க்கவேண்டுமாம் அவ்ளோதான்.
சீனாவின் சிச்சுவான் மாகாண நிர்வாகம் சுவாரஸ்யமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்குள்ள ஒரு தீவில் பாண்டா கரடிகளை பராமரித்து, பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள ஒரு கரடிக்கு "தாதி"யாக இருந்து பராமரிக்க 22 வயதுக்கு மேற்பட்ட நபர் வேலைக்கு தேவை என்றும், தனது பராமரிப்பில் உள்ள பாண்டா கரடியின் சுக, துக்கங்களில் பங்கேற்கக்கூடிய மனநிலையும், தகுதியும் படைத்தவராக அந்தப் பணியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த காப்பகம் அறிவித்துள்ளது.
இதற்கான நேர்முகத் தேர்வு கடந்த சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்டின் 365 நாட்களும் பாண்டா கரடியுடன் இருந்து, அதை கண்ணும் கருத்துமாக பராமரிப்பவருக்கு இலவச உணவு, ஒரு சொகுசு காருடன் ஆண்டு சம்பளமாக 2 லட்சம் யுவான் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 18 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.