சீன எச்சரிக்கையை மீறி பாதுகாப்பு மண்டலத்தில் பறந்த யு.எஸ். விமானங்கள்!
பெய்ஜிங்: சீனா பிரகடனப்படுத்தியுள்ள வான் பாதுகாப்பு மண்டலத்தில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடல் பகுதியை சீனாவும், ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இங்கு சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக விமானம் தாங்கி போர்க் கப்பல்களை நிறுத்தி அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் இந்த போக்கிற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்குமுன்பு, இந்த பகுதி தன்னுடைய வான் பாதுகாப்பு மண்டலத்தில் வருகிறது என்று சீனா பிரகடனப்படுத்தியது. இந்த பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் அனுமதியின்றி பறக்கக் கூடாது என்றும் சீனா கூறியது.
இதனால் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் சீனாவின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் வகையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று பி52 ரக இரண்டு போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பியது. இது சீனாவை கோபமடைய செய்திருக்கிறது. அன்னிய நாட்டு விமானங்கள் அனுமதியின்றி தங்களது வான்பரப்பில் ஊடுருவினால் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.