மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... 5 நாட்களில்... 1500 ரூம்கள் கொண்ட மருத்துவமனையை கட்டி அசத்திய சீனா
பெய்ஜிங்: சீனாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வெறும் ஐந்து நாட்களில் 1500 அறைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையைச் சீனா கட்டி அசத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது.
சீனா அரசு முதலில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றாலும்கூட, அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் சீனாவில் மிக விரைவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது.
வூஹான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா.. சந்தேகிக்க காரணங்கள் உள்ளன.. மைக் பாம்பியோ பகீர் தகவல்
மீண்டும் அதிகமாகும் கொரோனா பரவல்
கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, சீனாவில் விதிக்கப்பட்டிருந்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. சர்வதேச விமான போக்குவரத்தும் மெல்ல தொடங்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. பெய்ஜிங், நாங்கோங், ஷிஜியாஜுவாங், நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. அதேபோல ஹெய்லோங்ஜியாங், லியோனிங், சிச்சுவான் மாகாணங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களே காரணம்
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமும் வெளிநாடுகளிலிருந்து எடுத்து வரப்படும் சரக்குகள் மூலமுமே மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல முதல் கொரோனா பாதிப்பும் வேறு இடத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் சீனாவில் முதலில் வைரஸ் பரவல் ஏற்பட்டதாகப் பலரும் தவறான கருத்தைப் பரப்புவதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மருத்துவமனை
தற்போது சீனாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே, இவை இங்கு சமூக பரவலாக மாறிவிட்டது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக வெறும் ஐந்து நாட்களில் 1500 அறைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையைச் சீனா கட்டி அசத்தியுள்ளது. வைரஸ் பரவல் ஏற்படத் தொடங்கியபோது வூஹான் நகரில் இதேபோல மிகக் குறைந்த நாட்களில் மிகப் பெரிய மருத்துவமனையைச் சீனா காட்டியது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஷிஜியாஜுவாங் நகரில் 3000 அறைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையையும் சீன அரசு தற்போது கட்டி வருகிறது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் தற்போது வரை 87,988 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,635 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர் குழு கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வூஹான் நகருக்குச் சென்றுள்ளது. கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை அவர்கள் விரைவில் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.