திபெத்தில், பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா கட்டிய நீர் மின் நிலையம்...வெள்ள அபாயத்தில் இந்தியா!
பெய்ஜிங்: திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே நீர் மின் உற்பத்திக்கான அணையைக் கட்டி முடித்துள்ளது சீனா. திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதிக்கு யார்லுங் ஸாங்போ என்று பெயராகும். இந்த புதிய அணையால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த அணையால் இந்தியாவுக்கு ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஏற்கனவே இந்தியா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும் அதை சீனா பொருபட்படுத்தாமல் அணையைக் கட்டி முடித்து விட்டது. பிரம்மபுத்திரா நதியானது, இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த அணையானது, நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே என்று சீனா கூறி வந்தாலும் கூட பிரம்மபுத்திராவில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் சமயத்தில் எல்லாம் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நிலச்சரிவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
மேலும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்குள் வரும் நீரோட்டத்தையும் இந்த அணையானது குறைத்து விடும். இதனால் வட கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இந்திய நதிகளுக்கு நீர் வரத்தும் குறையும் வாய்ப்பு உள்ளது.
திபெத்தின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையமாக இதை சீனா அறிவித்துள்ளது. நேற்று முதல் இது செயல்பாட்டுக்கும் வந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம் திபெத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று சீனா கூறுகிறது.
மொத்தம் 1.5 பில்லியன் டாலர் செலவில் இந்த மின் நிலையத்தை கட்டியுள்ளது சீனா. இது கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. முதல் யூனிட் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் ஐந்து யூனிட்டுகள் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இந்த மின் நிலையத்தின் மூலம் மொத்தம் 5 லட்சத்து 10 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாம்.
பிரம்மபுத்திராவின் குறுக்கே மொத்தம் ஐந்து மின் திட்டங்களை சீனா திட்டமிட்டுள்ளது. தற்போது அதில் ஒன்றை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்தத் திட்டங்களால் இப்பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மிகப் பெரிய அளவில் சீர்கெடும் என்று விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.