புல்வாமா தாக்குதலுக்கு ஒருவழியாக சீனா கண்டனம்.. ஆனாலும் பழைய பல்லவியே பாடுகிறது
Recommended Video
பீஜிங்: உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்த பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நேற்று நடைபெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலுக்கு, சீனா இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உடனடியாக கண்டனம் தெரிவித்த நிலையில் சீனாவும், பாகிஸ்தானும் மட்டும் அமைதி காத்து வந்தன.
இந்த நிலையில் இன்று சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங்க் சுவாங் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் குறித்து சீனாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்த தீவிரவாதம் வகையில் வந்தாலும் அதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் என்பவனை சர்வதேச தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த, சுவாங், ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகமது, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. அதைத்தான் சீனா பின்பற்றும் என்று தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில், சீனாவிற்கு, வீட்டோ அதிகாரம் உள்ளது. எனவே வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளை சீனா தடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.