சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 242 பேர் சாவு.. பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. COVID-19 என அழைக்கப்படும் கொரோனாவால் ஹுபே மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மூச்சு காற்று மூலம் பரவும் இந்த வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கொரோனாவின் பாதிப்பு சீனாவில் தீவிரம் அடைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பதும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும் நடந்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஹுபே மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர். புதன்கிழமை (நேற்று ஒரு நாளில்) மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,840 ஆகும். ஒட்டுமொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,206 ஆக அதிகரித்துள்ளது.
பல ஆயிரம் டாக்டர்கள் முகாமிட்டு சீனாவின் ஹுபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ல் ஒருவரின் நிலைமை மோசமடைந்து வருகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களையே இந்த கொரோனா கொல்கிறது.