ஒரே தடுப்பூசி,4 வித்தியாசமான ரிசல்ட்-குழப்பத்தை ஏற்படுத்திய சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி முடிவுகள்
பெய்ஜிங்: பல நாடுகளில் நடைபெற்ற சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு நான்கு வித்தியாசமான முடிவுகள் கிடைத்துள்ளது, அந்தத் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
உலகெங்கும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இதில், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிக்கும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கும் பல்வேறு நாடுகளும் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக, ஃபைசர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் சினோபார்ம்
இதேபோல சீனாவைச் சேர்ந்த சினோபார்ம் என்ற நிறுவனமும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. இந்தத் தடுப்பூசியின் அவரசக்கால பயன்பாட்டிற்குக் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து சீனாவில் தற்போது சுமார் 30 லட்சம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே தடுப்பூசி நான்கு ரிசல்ட்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனை இந்தோனேஷியா, துருக்கி, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்றது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இந்தத் தடுப்பூசியின் சோதனைகளில் நான்கு வித்தியாசமான முடிவுகள் கிடைத்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை முடிவுகள்
இந்தோனேஷியாவில் 1,620 பேருக்கு நடைபெற்ற சினோபார்ம் தடுப்பூசி சோதனையில் அத்தடுப்பூசிக்கு 65% பலன் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற சினோபார்ம் தடுப்பூசி சோதனையில், அவை 91.25% பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, பிரேசில் நாட்டில் நடைபெற்ற சோதனையில் சினோபார்ம் தடுப்பூசி முறையே 78% மற்றும் 50.38% பலனளிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்தோனேஷிய அதிபர்
தடுப்பூசி குறித்து நம்பிக்கையை ஏற்படுத்த பொதுமக்கள் முன்னிலையில் இந்தோனேஷியா அதிபர் அடுத்த வாரம் சினோபார்ம் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளார். இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசி குறித்து நான்கு வித்தியாசமான முடிவுகள் கிடைத்துள்ளது தடுப்பூசி மீதான நம்பகதன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
காரணம் என்ன
இது குறித்து பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரான நிகோலாய் பெட்ரோவ்ஸ்கி கூறுகையில், "கொரோனா பரவலை ஆரம்பக்கட்டத்தில் கட்டுப்படுத்த தவறிய நாடுகள் தற்போது தங்கள் தடுப்பூசிகள் அதிகளவில் பலன் அளிப்பதாகக் கூறி வருகிறது. இதுபோல தடுப்பூசி பலன்களை அதிகப்படுத்திக் காட்டுவதற்குப் பின்னால் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன" என்றார்