அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா?
கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையை (சிஐஏ ) சேர்ந்த சுமார் 20 உளவாளிகளை சீன அரசு கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ அந்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்த அமெரிக்காவின் ரகசிய தகவல் சேகரிப்பு பணியை சேதப்படுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சிஐஏ முகவர்களை சீன அரசு அடையாளம் காண அந்த அமைப்புக்குள் ஊடுருவப்பட்டதா அல்லது ஊடுருவல் முகவர்கள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டனரா என்பது தெளிவாக தெரிவியவில்லை என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் முன்னாள் சிஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சீனாவில் உள்ள ஓர் அரசாங்க கட்டடத்தின் முற்றத்தில் உளவு தகவல் தெரிவிக்கும் ஒரு பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த செய்தி குறித்து சிஐஏ அமைப்பு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2010-ஆம் ஆண்டில் சீன அரசு அதிகாரத்துவ மையங்கள் தொடர்பாக தங்களுக்கு வரும் தகவல் ஆதாரங்கள் குறைய ஆரம்பித்ததாக நான்கு முன்னாள் சிஐஏ அதிகாரிகள் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தனர்.
2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உளவு தகவல் தெரிவிப்பவர்கள் காணாமல் போகத் தொடங்கினர்.
ஆனால், 2013-ஆம் ஆண்டில் அமெரிக்க உளவு முகவர்களை அடையாளம் காணும் திறனை சீன அரசு இழந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இதனால் சீனாவில் சிஐஏ தனது கட்டமைப்பை மீண்டும் உருவாக்கத் தொடங்கியது.
இதையும் படிக்கலாம்:
இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி
இரான் தேர்தல் நிலவரம்: ஹாசன் ரூஹானி முன்னணி
கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான்