மியான்மர் போர் விமான தாக்குதலில் 4 சீனர்கள் பலி- எல்லையில் படைகளைக் குவிக்கும் சீனா!!
யாங்கூன்/பெய்ஜிங்: மியான்மர் நாட்டு போர் விமானத்தில் இருந்து விழுந்த குண்டுகள் வெடித்ததில் எல்லையோரத்தில் 4 சீனர்கள் பலியானதால் அங்கு பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இச்சம்பவத்துக்கு மியான்மர் வருத்தம் தெரிவித்த போதும் சீனா அதை ஏற்காமல் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது.
மியான்மர் அரசு தனது நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தம் நடத்தி வருகிறது. அப்பிராந்தியத்தில் பதற்றத்தை மியான்மர் தணிக்கவேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் வலியுறுத்தல்.
இந்நிலையில்தான் கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் விமானப் படை தாக்குதல் நடத்திய போது போர் விமானத்தில் இருந்து குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த குண்டுகள் சீனா எல்லைப் பகுதியில் விழுந்ததில் 4 சீன நாட்டவர் பலியாகினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா மியான்மர் நாட்டு தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. அத்துடன் எல்லைப் பகுதியில் படைகளையும் குவித்தது.
இருப்பினும் கிளர்ச்சியாளர்கள்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று மியான்மர் அரசு சமாதானப்படுத்திப் பார்த்தது. இதையும் சீனா ஏற்கவில்லை. தமது நாட்டவர் 4 பேர் பலியானதற்கு மியான்மரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடு.
இவ்விவகாரத்தால் இருநாடுகளின் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது