இங்கிலாந்து - சீனா ஆடும் உள்ளே வெளியே ஆட்டம் - குழப்பத்தில் மக்கள்
சீனா: ஹாங்காங் மக்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் தேசிய (வெளிநாட்டு) பாஸ்போர்ட் "இனி அங்கீகரிக்கப்பட மாட்டாது" என்று சீனா இன்று (ஜன.29) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 30 லட்சம் ஹாங்காங் மக்களுக்கு தங்கள் நாட்டில் குடியுரிமை வழங்குகிறது இங்கிலாந்து.
சுதந்திரத்திற்கு முன்பு, ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்கு பலரும் வெளிநாடு வாழ் பிரிட்டிஷராகவே உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு வாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
இங்கிலாந்து விசா
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், British National (Overseas) பாஸ்போர்ட் பி.என் (ஓ) உள்ளவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருப்பவர்கள் பிரிட்டனில் வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கும் விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சீனாவிற்கு பதிலடி தரும் விதமாக இங்கிலாந்து இந்த நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில் தான், ஹாங்காங் மக்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் தேசிய (வெளிநாட்டு) பாஸ்போர்ட் இனி செல்லாது என்று சீனா தடாலடியாக அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு தடை
அதாவது, "ஜனவரி 31 முதல், BN(O) பாஸ்போர்ட்டை ஒரு பயண ஆவணம் மற்றும் அடையாள ஆவணமாக சீனா இனி அங்கீகரிக்காது. அப்படி கொண்டு வரும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இங்கிலாந்துடன் மோதல்
இது லண்டனுடான மோதல் போக்கை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பெய்ஜிங்கில் BN(O) பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை சீனா உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீன அதிகாரிகள் கடந்த ஆண்டே BN(O) பாஸ்போர்ட்கள் அங்கீகரிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எச்சரித்தனர். அந்த நேரத்தில் அவர்கள், BN(O) பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சீனாவுக்கு பயணிக்க முடியாமல் போகலாம் என்றார்கள்.
இருப்பினும், ஆவணத்தை வைத்திருப்பவர் யார் என்று சீன அதிகாரிகளுக்குத் தெரியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஹாங்காங் பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையைப் பயன்படுத்தி நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். mainland China-ல் நுழைய, அவர்கள் தங்கள் ஹாங்காங் பாஸ்போர்ட் அல்லது ஒரு mainland travel permit பயன்படுத்த வேண்டும்.
அவர்கள் பி.என் (ஓ) பாஸ்போர்ட்டை பிரிட்டன் அல்லது இந்த ஆவணத்தை அங்கீகரிக்கும் மற்ற நாடுகளுக்குள் நுழையும் போது மட்டுமே பயன்படுத்துவார்கள்.
"இது ஹாங்காங் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு சீனா அனுப்பிய ஒரு வலுவான செய்தி. ஆனால் நடைமுறையில் இதற்காக விண்ணப்பிக்கக் கோரி மக்கள் மிரட்டப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று நிபுணர் வில்லி லாம் கூறியுள்ளார்.
70% மக்களிடம் பி.என் (ஓ) பாஸ்போர்ட்
"பி.என் (ஓ) பாஸ்போர்ட்டுக்கு யார் விண்ணப்பிக்கலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது என்பதை ஹாங்காங் மற்றும் பெய்ஜிங் அதிகாரிகள் கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை என்று தெரிகிறது, ஏனெனில் பிரிட்டிஷ் தூதரகம் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாது," என்று அவர் மேலும் கூறினார்.
ஹாங்காங்கின் மொத்த மக்கள் தொகையான 7.5 மில்லியனில் 70 சதவீதம் பேரிடம் பி.என் (ஓ) பாஸ்போர்ட் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பிஎன் (ஓ) பாஸ்போர்ட்களுக்கான விண்ணப்பங்கள் 300 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. ஜனவரி நடுப்பகுதி வரை 733,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.