அடுத்த வார்னிங்..! சீன வெள்ளத்தால் உடையும் அணைகள்.. சர்வதேச அளவில் எதிரொலிக்கப் போகும் பாதிப்பு
பெய்ஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கனமழையால் 33 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் நிசான் கார்கள், ஆப்பிள் ஐபோன்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Recommended Video
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை அனைத்து நாடுகளும் உணர தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் தான், அமெரிக்கா மற்றும் கனடா 120 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றிருந்தது.
புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ்
இப்போது பல நாடுகளிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் பெய்த கனமழையால் சுமார் 180க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
|
100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்
இந்தப் பட்டியலில் இப்போது சீனாவும் சேர்ந்து கொண்டது என்றே சொல்லலாம். கடந்த ஒரு சில நாட்களாகவே சீனாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் சில நாட்களில் அங்கு 624 மிமி கனமழை கொட்டி தீர்த்து உள்ளது. இதனால் சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
|
33 பேர் பலி
ஹெனான் மாகாணத்தில் கனமழை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வெள்ளத்தால் சுமார் 30 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான பகுதிகளில் வசித்த சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் குறைந்தபட்சம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
|
அணை உடைப்பு
ஹெனான் மாகாணத்தில் ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் மூன்று நாட்களில்( 617.1 மிமீ) மழை பெய்துள்ளது. இதனால் மஞ்சள் நதி மற்றும் ஹைஹே நதிகளில் அபாய அளவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வெள்ள பாதிப்பு ஒரு பக்கம் தொடரும் நிலையில், புதிய தலைவலியாக அங்கு இருக்கும் சில அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த கனமழை காரணமாக ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள யிஹெடான் அணையில் சுமார் 20 மீட்டர் அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அணை எந்நேரமும் உடையலாம் என மாகாண அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச பாதிப்பு
ஹெனான் நகரில் அணை உடைப்பு ஏற்பட்டால், இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்கும். ஏனென்றால், ஹெனனன் மாகாணம் 11 கோடி மக்களைக் கொண்ட பல சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகள் கொண்ட ஒரு தொழில் மாகாணம். ஆப்பிள், நிசான் கார் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இதனால் இங்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும்கூட சர்வதேச அளவில் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.
உற்பத்தி பணிகள்
வெள்ளம் காரணமாக ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள SAIC Motor மற்றும் நிசான் ஆகியவை தற்காலிகமாக தங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. அதேபோல ஐபோன்கள் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் ஆலையிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதம் ஐபோன் 12 வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த வெள்ளத்தால் உற்பத்தி பணிகள் அதிக காலம் பாதிக்கப்பட்டால் புதிய ஐபோன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும் பாதிப்பு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் தான் இன்னர் மங்கோலியா என்ற மாகாணத்தில் இரண்டு அணைகள் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சீனாவில் மொத்தம் 98,000 அணைகள் உள்ளன. இவை பெரும்பாலும் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அதில் 80% மேல் 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்பதால் இதுபோன்ற கனமழையை எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.