பனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்
நியூயார்க்: சீனா ஒருபோதும் எந்த ஒரு நாட்டின் மீது மேலாதிக்கத்தையோ, விரிவாக்கத்தையோ, அல்லது செல்வாக்கு மண்டலத்தையோ தேடாது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறினார். அத்துடன் சீனாவிற்கு எந்தவொரு நாட்டுடனும் "பனிப்போர்" அல்லது "சூடான யுத்தத்தை" நடத்த விருப்பமில்லை என்றார்.
கிழக்கு லடாக்கில் சீன மற்றும் இந்தியப் படைகளுக்கு இடையிலான பதட்டமான இராணுவ மோதலை குறைக்க நான்கு மாதங்களுக்கும் மேலாக சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அங்கு மோதல்களைத் தீர்க்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது அமர்வின் பொது விவாதத்தில் முன் பதிவு செய்யப்பட்ட தலைவர்களின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில் சீனா அதிபர் ஜி ஜின் பிங் உரை ஒளிபரப்பப்பட்டது,
2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா
சூடான யுத்தம்
அவர் அந்த வீடியோவில் நாங்கள் தொடர்ந்து வேறுபாடுகளைச் சுருக்கி மற்றவர்களுடன் மோதல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம். நாங்கள் ஒருபோதும் மேலாதிக்கத்தையோ, விரிவாக்கத்தையோ, செல்வாக்கு மண்டலத்தையோ தேட மாட்டோம். எந்தவொரு நாட்டினருடனும் ஒரு பனிப்போர் அல்லது சூடான யுத்தத்தை எதிர்த்துப் போராட எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை,
பொருளாதார மீட்சி
மூடிய கதவுகளுக்குப் பின்னால் நாடு வளர்ச்சியைத் தொட முடியாது. காலப்போக்கில், உள்நாட்டு புழக்கத்துடன் முக்கிய வளர்ச்சி மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுழற்சிகள் ஒருவருக்கொருவர் வலுப்படுத்துவதன் மூலம் புதிய மேம்பாட்டு முன்னுதாரணத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக இடத்தை உருவாக்கும் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு உந்துதலை அளிக்கும்.
களங்கப்படுத்த கூடாது
கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் நமக்குள் ஒற்றுமையை மேம்படுத்தி ஒன்றாக இணைய வேண்டும்.. நாம் அறிவியலின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும், உலக சுகாதார அமைப்பின் முக்கிய பங்கிற்கு இடம் அளிக்க வேண்டும். இந்த தொற்றுநோயை வெல்ல கூட்டு சர்வதேச பதிலை தொடங்க வேண்டும். பிரச்சினையை அரசியலாக்குவது அல்லது களங்கப்படுத்துதலை நிராகரிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
சீனா பொறுப்பேற்க வேண்டும்
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை "சீனா வைரஸ்" நோயை உலகிற்கு "கட்டவிழ்த்துவிட்டதற்காக" கொதித்தார், கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களைக் கொன்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக ஐக்கிய நாடுகள் சபை சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று கோரினார். கொரோனா வைரஸ் தோன்றிய சீனா, வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கும், உலகம் முழுவதும் பரவ அனுமதித்ததற்கும் பதில்அளிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கோரினார்.
சொன்னது எல்லாம் பொய்
"சீன அரசாங்கமும், உலக சுகாதார அமைப்பும் - கிட்டத்தட்ட சீனாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன - மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொய்யாக அறிவித்தன. பின்னர், அறிகுறிகள் இல்லாதவர்கள் நோயைப் பரப்ப மாட்டார்கள் என்று அவர்கள் பொய் கூறினர். அவர்களின் செயல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சீனாவைப் பொறுப்பேற்க வேண்டும்" என்று டிரம்ப் ஆவேசமாக பேசினார்.