போர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்.. ராணுவ வீரர்களுக்கு சீன அதிபர் வார்னிங்!
போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருகிறது. எல்லையில் அத்துமீறும் சீனா ராணுவ வீரர்களையும் குவித்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் மக்கள் புரட்சிகர ராணுவம் தொடங்கி 90 ஆண்டுகள் ஆவதன் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ராணுவ வீரர்கள், போர்தளவாடங்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளன.
அணிவகுப்பு ஒத்திகை
இதையொட்டி, ஜுரிஹே ராணுவ மையத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
நேரில் பார்வையிட்ட அதிபர்
இந்த அணிவகுப்பு ஒத்திகையை சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று நேரில் பார்வையிட்டார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
ராணுவத்துக்கு அதிக பொறுப்பு
இதையடுத்து ராணுவ வீரர்கள் மத்தியில் சீன அதிபர் உரையாற்றினார். அப்போது நாட்டின் அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் ராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
போரை எதிர்கொள்ள..
உலகம் அமைதியாக இருப்பதற்கு பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். நமது நாட்டின் மீது யாராவது போர் தொடுக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அவர் ராணுவர் வீரர்களை எச்சரித்தார்.
சீன ராணுவம் உலக தரம்வாய்ந்தது
எதிர்ப்பவர்களை வெற்றிகொள்ளும் திறமை நமது ராணுவத்துக்கு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றில் நமது வீரர்கள் திறம்பட செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நமது ராணுவம் உலகத்தரம் வாய்ந்தது என்றார்.
அதிபர் பேச்சால் பதற்றம்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. எல்லைப்பகுதிகளிலும் ராணுவ வீரர்களை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ராணுவ வீரர்களை போருக்கு தயாராக இருக்கும் படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.