"தேவையில்லாமல் உள்ள வராதீங்க! அப்புறம்.." அமெரிக்க அதிபரை நேரடியாக எச்சரிக்கும் சீனா! இதுதான் விஷயமா
பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பைடன் எச்சரித்து இருந்த நிலையில், இதற்குச் சீனா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படி அமெரிக்க அதிபர் பைடனும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்பு, ஜப்பான் பிரதமரைச் சந்தித்து பைடன் ஆலோசனை நடத்தினர்.
வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி
பைடன் பேச்சு
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், சீனா பேராபத்திடம் விளையாடிக் கொண்டு இருக்கிறது என்று எச்சரித்துள்ளார். தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளைச் செய்யும் என்றும் உறுதி அளித்தார். சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், அதிபர் பைடன் சீனாவுக்கு எதிராக முதல்முறையாக இவ்வளவு கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சீனா- தைவான் விவகாரம்
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. தேவைப்பட்டால் ஒரு நாள் வலுக்கட்டாயமாகத் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும் சீனா தயாராகவே உள்ளது. இந்தச் சூழலில் தான் பைடன் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதற்குச் சீனா இப்போது அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
சமரசம் இல்லை
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், "சீனா எல்லையில் தைவான் பிரிக்க முடியாத பகுதியாகும். தைவான் விவகாரம் என்பது முழுக்க முழுக்க சீனாவின் உள்நாட்டு விவகாரம். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் நலன்களைத் தொடும் பிரச்சினைகளில், சீனா எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது.
மிக உறுதி
நாட்டின் 140 கோடி மக்களும் தேசத்தின் நலனைக் காக்க முன்னுரிமை தருவார்கள். தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீன மக்கள் மிக மிக உறுதியாக உள்ளனர். இதை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது," என்று அவர் கூறினார்.
தெளிவு இல்லை
தைவான் விவகாரத்தைப் பொருத்தவரை பெரும்பாலான உலக நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் ராஜதந்திர ரீதியாகச் சீனாவை அங்கீகரிக்கிறது. ஆனால் அதேநேரம் தைவான் நாட்டு உடனும் ராஜதந்திர உறவுகளையும் பராமரிக்கிறது. சீனா - தைவான் விவகாரத்தில் பல ஆண்டுகளாகத் தெளிவான கொள்கை முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை. மேலும், கொள்கை ரீதியாகத் தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்பதையும் அது தெளிவுபடுத்தவில்லை.
அமெரிக்கா கொள்கை
சுருங்கச் சொன்னால் தைவான் மீது சீனா போரை ஆரம்பிப்பதைத் தடுக்கும் வகையிலும், அதேநேரம் தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்காமல் இருக்கும் வகையில் அமெரிக்காவின் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடன், போர் ஏற்பட்டால் அமெரிக்கா ராணுவ ரீதியாக உதவும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.