1962ம் ஆண்டு போரை நினைவில் வையுங்கள்… இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போரை நினைவுபடுத்தி அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பெய்ஜிங்: 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போரை நினைவுபடுத்தி அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சீன எல்லை பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு சிக்கிம் செக்டாரில் இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ள சீனா, 1962ம் ஆண்டு நடைபெற்ற போரை குறிப்பிட்டு வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என அதிரடியாகக் கூறியுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், சிக்கிம் செக்டாரில் டோங் லாங் பகுதியில் இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு புகைப்படத்தை காட்டினார்.
சட்டவிரோதம்
மேலும், அவர் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப பெறுவதன் மூலமாகவே இரு நாட்டு எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். சீன எல்லைக்குள் சட்டவிரோதமான நுழைவு ஏற்பட்டதுமே நாங்கள் இந்தியா மற்றும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தோம் என்று தெரிவித்தார்.
நிபந்தனை என்ன?
தொடர்ந்து லு காங் கூறுகையில், இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக வெளிக்காட்டிய புகைப்படங்கள் சீன வெளியுறவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். இந்தியா எல்லையில் இருந்து ராணுவத்தை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். எல்லை பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு ஒரு அடிப்படையாக அதுவே இருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ராணுவம் தயார்
எல்லையில், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 8-ம் தேதி இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசுகையில், சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
போர் பதற்றம்
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த லு காங், இதுபோன்று சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் பொறுப்பற்றது. இந்திய ராணுவத்தில் குறிப்பிட்ட நபர் வரலாற்று பாடங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆரவாரமாய் கூக்குரலிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது இந்திய சீன எல்லையில் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.