ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா.. பின்னணியில் இருக்கும் திட்டம்.. இந்தியாவிற்கு எதிராக டீல்?
தெக்ரான்: எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஈரானும் சீனாவும் ஒன்று சேர்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு பயந்து உலக நாடுகள் எல்லாம் ஈரானை புறக்கணித்து வந்த நிலையில் சீனா அந்த நாட்டில் சுமார் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Recommended Video
ஊருக்குள் ஒரு பழமொழி உண்டு, தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்களே (உண்மை அர்த்தம் வேறு) அப்படித்தான், எங்கோ இருவர் சண்டை போடுவதும், ஒன்று சேர்வதும், இந்தியாவை பாதிக்கிறது.
உலகமயமாக்கல் விளைவால் ஏழை நாடுகளின் சந்தைகளை கைப்பற்றுவதற்கும், அந்த நாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு அணுகூலமான பலன்கள் பெறுவதற்கும் பணக்கார நாடுகளுக்கு இடையே கடும் போட்டி அதிகரித்துள்ளது. இதுதான் இன்றைய நிஜமான எதார்த்தம்.
5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா!
அமெரிக்கா கோபம்
ஈரானை ஆரம்பம் முதலே அமெரிக்காவுக்கு பிடிக்காது. ஈராக்கை தாக்கி அழித்த மாதிரி, ஈரானையும் காலி செய்துவிடும் அளவுக்கு அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதேபோல் ஈரானும் அமெரிக்கா மீது தீராத பகையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீதும் அமெரிக்கா கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த கோபம் எப்படி மாறியது என்றால், சீனாவின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஒடுக்கி அந்த நாட்டை தனிமைப்படுத்தி மிரட்டி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்கிற அளவுக்கு மாறி உள்ளது.
ஈரானுக்கு தோள்
இதுநாள் வரை மென்மையான போக்கை தங்களிடம் கடைபிடித்து வந்த அமெரிக்கா , எதிரியாக நினைத்து பாய காத்திருப்பதை சீனா அமைதியாகவே வேடிக்கை பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு பிடிக்காத ஈரான், வடகொரியா ரஷ்யா உடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடியாக களம் பதித்து ஈரானுக்கு தற்போது தோள்கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
400 பில்லியன் டாலர் முதலீடு
ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே விரைவில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஈரான் குறைந்த விலையில் சீனாவுக்குக் கச்சா எண்ணெய்யை வழங்கும். இதற்குப் பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 280 பில்லியன் டாலர்கள் முதலீடும், உற்பத்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் 120 பில்லியன் டாலர்கள் முதலீடும் சீனா செய்ய உள்ளது.
ரயில்வே திட்டங்கள்
இரு நாடுகளுக்கு இடையே எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதன்படி 5ஜி தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்கும் விஷயத்தில் ஈரானுக்கு சீனா உதவும். வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே உள்பட ஏராளமான திட்டங்களை செய்து கொடுக்கும். இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
25 ஆண்டு ஒப்பந்தம்
அடுத்த 25 ஆண்டுகளில் இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பரஸ்பர ஒத்துழைப்பில் மேற்கொள்ளும். ஆயுதங்கள் தயாரிப்பதிலும், உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் போடப்பட்டால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவுக்கு பாதிப்பு
ஏனெனில் பாகிஸ்தானின் கயாடர் துறைமுகத்தில் சீனா முதலீடு செய்து மேம்படுத்தியதால், இதற்குப் பதிலடியாக ஈரானின் சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்த களம் இறங்கியது. ஆனால், இப்போது ஈரானில் சீனா அதிக அளவு முதலீடுகள் செய்தால் இந்தியாவின் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும். ஏற்கனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்ட நிலையில், இந்தியாவை இப்போது ஈரான் கைவிட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவை மிரட்டும்
சீனாவின் கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஈரான் உதவும் என்பதால் கிட்டத்தட்ட சீனாவிற்கு மிகப்பெரிய லாபமாக மாறிவிடும். ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளாக நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சீனா வளைத்து விட்டதால் இனி சீனா நினைத்ததை சாதிக்க முடியும். சீனா இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறது. ஆனால் வலிமையான பொருளாதார சக்தியான இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. அதனால் தான் இந்தியாவை அடிக்கடி மிரட்டி பிரச்சனைகளை செய்து வருகிறது சீனா.