உலகின் முதல் ‘விண்கல் சுரங்க ரோபோ’.. நவம்பரில் விண்ணில் ஏவும் சீனா.. பெரும் ஆர்வத்தில் உலகநாடுகள் !
உலகின் முதல் சுரங்க ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது சீனா.
பெய்ஜிங் : உலகின் முதல் சுரங்க ரோபோவை நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது சீனா.
பூமியில் உள்ள வளங்களைப் போலவே விண்வெளியில் உள்ள வளங்களை அபகரிக்கவும், பயன்படுத்தவும் உலக நாடுகள் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. இதனாலேயே ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அந்தவகையில் வரும் நவம்பர் மாதம் உலகின் முதல் விண்வெளி சுரங்க ரோபாவை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது சீனா. பெய்ஜிங்கில் உள்ள தனியார் நிறுவனமான ஆர்ஜின் ஸ்பேஸ் தான் இந்த விண்வெளி சுரங்க ரோபா திட்டத்தை திட்டமிட்டு வருகிறது. இந்த சுரங்க ரோபோவானது, 'விண்கல் சுரங்க ரோபோ' என அழைக்கப்படுகிறது.
ரோபோவின் வேலை
பெயர் தான் விண்வெளி சுரங்க ரோபோ, மற்றபடி நீங்கள் நினைப்பது போல் இந்த ரோபோ விண்கல் எதிலும் இப்போதைக்கு சுரங்கம் தோண்டப்போவதில்லை. விண்கற்களில் துளையிட்டு ஆராய்ச்சிகள் நடந்தும் தொழில்நுட்பங்களை உருவாக்க கள சோதனை செய்யத்தான் இந்த ரோபோ அங்கு செல்ல இருக்கிறது.
ஆராய்ச்சி
என் இ ஓ - 1 (NEO-1 ) என்ற அந்த விண்கலம் சீனாவின் லாங் மார்ச் ராக்கெட்டின் இரண்டாம் நிலை சுமைகளாக விண்ணில் ஏவப்படுகிறது. இலகுவான வகையில் சுமார் 30 கிலோ எடையுடன் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 500 கி.மீ உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து ஆராய இருக்கிறது.
இதுதான் குறிக்கோள்
இந்த விண்கல் சுரங்க ரோபோ பற்றி ஆர்ஜின் ஸ்பேஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் யூ தியான்ஹோங் அளித்துள்ள பேட்டியொன்றில், "பல்வேறு குறிக்கோள்களுடன் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. அதாவது விண்கல சுற்றுப்பாதை, சிறிய வான் பொருட்களைக் கவ்விப் பிடிப்பது, விண்கலங்களை அடையாளம் காணுவது மற்றும் கட்டுப்படுத்துவது போன்ற பல செயல்பாடுகளை சரிபார்ப்பதே எங்களது குறிக்கோள்" எனத் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இதற்கு முன்னர் வேறு எந்த விண்கலமும் செய்யாத புதியதொரு ஆய்வைத் தான் இந்த என் இ ஓ -1 செய்ய இருக்கிறது. எனவே இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் அனைத்துமே விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கற்களாக பார்க்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கம் வருங்கால விண்கல் சுரங்கத் தொழிலாளியை உருவாக்குவது அல்ல என்பதை ஆர்ஜின் ஸ்பேஸ் தெளிவுபட கூறியுள்ளது.
புதிய வாய்ப்பு
சீனாவின் இந்த முயற்சி கேட்பதற்கு ஏதோ ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். உண்மையில் இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்தால், பல டிரில்லியன் டாலர் புழங்கக்கூடிய புதிய தொழில்துறை உருவாகும் என்பதை மட்டும் இங்கே உறுதிபடச் சொல்ல முடியும். எனவே தான் சீனாவின் இந்த ஆய்வை உலக நாடுகள் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளன.
உலகநாடுகள் போட்டி
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் காலனிகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எலன் மாஸ்க் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, மற்றொரு புறம் வீனஸ் எங்களுக்குத் தான் சொந்தம் என ரஷ்யா சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளது. இதனாலேயே விண்வெளி செயல்பாடுகளை தங்களுக்கான எதிர்கால திட்டங்களாகக் கொண்டு உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
புதிய வணிக வாய்ப்பு
சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனியார் நிறுவனங்களிடமிருந்து ‘சந்திரனின் பாறைகளை' வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனாலேயே சீனாவின் இது போன்ற ஆராய்ச்சிகள் புதிய வணிக வாய்ப்பாக மாறியுள்ளது. விண்வெளியில் இருந்து எதையாவது எடுத்து வந்து, அதை பூமியில் விற்பனை செய்வதற்கான வழிகளாக இத்தகைய ஆய்வுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..