சீனா காட்டும் வேகம்.. ஆராய்ச்சியில் பெரிய வெற்றி.. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி.. என்ன நடக்கும்?
பெய்ஜிங்: கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் செய்யப்படும் ஆராய்ச்சியில் சீனா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சீனாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க பல நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி அல்லது மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. மொத்தம் 100 முக்கியமான நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறது. முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, இஸ்ரேல் , ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுக்கு முன்பாக சீனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆம் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சீனா மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவை சேர்ந்த சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனம் ஷுசோவ் தடுப்பூசியை உருவாக்கி, அதில் ஆராய்ச்சி செய்து வருகிறது. தனியார் நிறுவனமான இது அங்கு அரசு மூலம் தீவிரமாக ஆதரிக்கப்படும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கொரோனா ஆராய்ச்சியில் வெற்றிக்கு விளிம்பில் உள்ளது.
கொரோனா படுத்தும்பாடு... மத்திய பிரதேச மாநில பால்காரர்களின் பலே ஐடியா
பேட்டி அளித்தது
இந்த நிறுவனம் தங்கள் ஆராய்ச்சி குறித்து கூறும் போது, பொதுவாக தடுப்பூசிகளை கண்டுபிடிக்க 10 வருடம் ஆகும். ஆனால் தற்போது பரவும் கொரோனா வைரசுக்கு வேகமாக தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். அதனால் வேகமாக நாங்கள் உழைக்கிறோம். விரைவில் மருந்து கண்டுபிடிப்போம். இதற்காக பெரிய அளவில் நாங்கள் ஆராய்ச்சி குழுக்களை உருவாக்கி உள்ளோம், என்று கூறியுள்ளது.
சார்ஸ் ஆராய்ச்சி
இந்த நிறுவனம்தான் சார்ஸ் பரவிய போது அதற்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை செய்தது. ஆனால் ஆராய்ச்சி முடியும் முன் சார்ஸ் காணாமல் போனது. ஆனால் சார்ஸ் வைரஸும் கொரோனா வைரஸின் குடும்ப வைரஸ் என்பதால் இந்த முறை தனது ஆராய்ச்சியை சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் துரிதப்படுத்தி உள்ளது. விரைவில் இதில் சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் முழு வெற்றிபெறும் என்கிறார்கள்.
எப்படி செய்யும்?
கொரோனா வைரஸின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதை வளரும் திறன், இனப்பெருக்க திறனை காலி செய்யும் வகையில் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த நிறுவனம் இறங்கி உள்ளது. அதேபோல் சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் சீனாவின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் & பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி உடன் இணைந்து பிகோவேக் (PiCoVacc) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதை எலிகள், பன்றிகள் மீது சோதனை செய்து வெற்றி கண்டனர்.
குரங்கு சோதனை
அதேபோல் இன்னொரு பக்கம் குரங்கிடமும் இதை சோதனை செய்தனர். அதில் குரங்கு கொரோனா தாக்குதலில் இருந்து தப்பித்தது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. குரங்கிடம் இந்த சோதனை வெற்றிபெற்றதால் விரைவில் மனிதர்களிடம் இந்த சோதனையை செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த சோதனையில் வெற்றிகிடைத்தால் விரைவில் இந்த மருந்து அமலுக்கு வரும் என்று கூறுகிறார்கள்.
5 நிறுவனம்
ஆனால் இந்த நிறுவனம் மட்டுமின்றி சீனாவை சேர்ந்த வேறு பிரபல ஐந்து நிறுவனங்களும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதில் 5 நிறுவனங்களும் மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. துரிதமாக சோதனையை மேற்கொள்ள இவர்கள் முடிவு செய்துள்ளனர். அதிலும் கன்சினோ பயோலாஜிக்கல் நிறுவனம் அங்கு ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.
மருத்துவர் ஒருவர்
இதற்காக அந்த நிறுவனத்தின் மூத்த மருத்துவர் ஒருவரே தனக்குள் தடுப்பூசியை போட்டு சோதனை செய்துள்ளார். ராணுவ மருத்துவ ஆராய்ச்சியாளர் சென் வெய் தனக்கு தானே தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். அதேபோல் இன்னும் சில ராணுவ வீரர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதன் முடிவு எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரிய வரும். அதன்பின் சோதனையை விரிவுபடுத்துவார்கள்.
சீனாவின் மதிப்பு உயரும்
இப்படி மருந்துகண்டுபிடித்தால் உலகம் முழுக்க தங்களின் மதிப்பு உயரும் என்று சீனா நினைக்கிறது. உலகிற்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தால் கொரோனாவால் ஏற்பட்ட கறை போகும் என்று சீனா நினைக்கிறது. முக்கியமாக அமெரிக்காவின் புகார்களை சமாளிக்க மருந்து ஒன்று மட்டுமே ஒரே வழியாக இருக்கும் என்று சீனா தீவிரமாக நம்புகிறது.