டேக் டைவர்ஷன்.. அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு சீன மக்களுக்கு பயண எச்சரிக்கை!
பீஜிங்: அமெரிக்காவிற்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வதற்காக செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீன அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் இறக்குமதி வரிவிதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அந்நாட்டின் முரண்பாடான இறக்குமதி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிரடியாக வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
இதனால், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு கடந்த ஆண்டு டிரம்ப் வரிவிதித்தார். டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் சீனாவுக்கு கடும் அதிருப்தியையும், அ்திர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதாக சீனாவும் அறிவித்தது. இதனால், உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையில் வர்த்தக போர் மூண்டுள்ளது. கடந்த மாதம் 200 மில்லியன் டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக டிரம்ப் அதிரடியாக உயர்த்தி அறிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியாக அமைந்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்லும் தன் நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா செல்ல இருக்கும் தன் நாட்டு பிரஜைகள் தங்களது பாதுகாப்பு மற்றும் அங்கு நிலவும் சூழலை மனதில் கொண்டு முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், இரு நாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழ்நிலையை நிலவுவதை மனதில் கொண்டு சீனர்கள் செயல்படுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் வாழும் தனது நாட்டு குடிமக்களை அந்நாட்டு அரசு துன்புறுத்தி வருவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டி இருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரியும் சீனர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.