திபெத்திலும் ஆயுதங்களை குவிக்கிறது சீனா... திடுக் தகவல்கள்
திபெத் பகுதியை நோக்கி சீன ராணுவத்தின் கனரக போர் ஆயுதங்களுடன் சீன படைகள் செல்வதாக அந்நாட்டு ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்: திபெத்தை நோக்கி சீன ராணுவம், கனரக போர் ஆயுதங்களுடன் படிப்படியாக நகர்கிறது என அந்நாட்டு ராணுவ ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பீடபூமியில் சீனாவின் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இருதரப்பு வீரர்கள் மத்தியிலும் வாக்குவாதம் ஏற்பட்டு, போர் பதற்றம் வரை கொண்டுவந்து விட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று இந்திய விளக்கமும் அளித்திருந்தது.
சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் , இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என சீனா அடிக்கடி மிரட்டி வருகிறது.
ஆனால் ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என இந்தியாவும் கூறிவிட்டது. இந்நிலையில் சீன ராணுவம் எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு செல்கிறது எனவும் சீன ராணுவ ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' , " இந்தியாவுடனான எல்லையை கையாளும் சீனப் படைப்பிரிவின் கமாண்டோவின் உத்தரவின்படி , வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி ராணுவப்படைகள் செல்கிறது" என பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஊடகம் ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ராணுவ செய்தித் தொடர்பாளர் நி லிசியாங் கூறுகையில், " சீன ராணுவ தளவாடங்கள் குவிக்கும் அளவுக்கு திபெத்தில் சரியான இடம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.