இருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா!
பீஜிங்: சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் முக்கியமான மைய பிரச்சினைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, நேற்று, 13வது சுற்று ராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டபோது இந்த கருத்து பரிமாறப்பட்டது.
Recommended Video
இந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாக மாற்றிவிட்டார்.
வரைபடம்
வரைபடத்தை மாற்றியமைத்து இந்தியாவை கோபப்படுத்தியதோடு, ராமர் தங்களது நாட்டில் பிறந்தார் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறி பெரும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சீனாவும் நேபாளமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன தரப்பு கூறியுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சாலை திட்டம்
லூவோ ஜாவோ ஹுய் தனது உரையின்போது கூறியது: கடந்த ஆண்டு நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தங்களில், இருநாடுகளும் மிகுந்த கவனம் செலுத்தி நிறைவேற்றவேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தை இணைந்து செயல்படுத்த வேண்டும். ஒன் பெல்ட் ஒன் ரோடு என்ற திட்டத்தை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை
மேலும் அவர் பேசுகையில், முக்கியமான விவகாரங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். தொடர்பு மேம்பாட்டு, உதவி, பாதுகாப்பு, சட்ட செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். கலாச்சார பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும். இவ்வாறு சீன தரப்பு வலியுறுத்தியதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன திட்டங்கள்
சீனாவின் பல பில்லியன் டாலர் பெல்ட் மற்றும் சாலை திட்டம் (பிஆர்ஐ) திபெத் வழியாக டிரான்ஸ்-இமயமலை பிராந்திய இணைப்பை நோக்கமாக கொண்டது. சீனாவின் திட்டங்களில், திபெத்தின் ஜிலாங் முதல் காத்மாண்டு வரையிலான சாலையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல், நேபாளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைத்தல், நேபாளத்தின் மூன்று காரிடார்கள் அமைப்பது உள்ளிட்டவை அடங்கும்.
பாகிஸ்தான் பாதையில் நேபாளம்?
இந்த திட்டங்களுக்கு நேபாளம் ஆமாம் சாமி போட்டு தலையாட்டி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுடன் கரகோரம் ஹைவே என்ற பெயரில் பொருளாதார காரிடார் சாலை திட்டத்தை செயல்படுத்துகிறது சீனா. இதேபோலத்தான், நேபாளத்திலும் சாலை முதலீடுகளை செய்கிறது. பாகிஸ்தானை போலவே, சீனாவுடன் நட்பு பாராட்டி நெருக்கம் காட்டி வருகிறது நேபாளம். இந்த நிலையில், சீன நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரின் இந்த பேச்சு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.