எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை - சீனா அதிபர் ஜி ஜின்பிங்
அமைதியான, பொதுவான வளர்ச்சிக்கு சீனா உறுதி பூண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையில் 75வது பொதுக்கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று பேசியுள்ளார்.
பீஜிங்: நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும், போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.
ஐ.நா சபையின் 75வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், ஐநா சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உலக தலைவர்கள் காணொளி காட்சி வழியே பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல நாட்டு தலைவர்களும் பேசி வருகின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிகழ்ச்சியில் இன்று பேசினார். அப்போது அவர், உலகில் மிக பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அமைதி, வெளிப்படை தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு
நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும், போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை என்றும் தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை வழியே சுமூக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றும் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.