சீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க
பெய்ஜிங்: சீனாவில் ஏழு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தும் சாலைகளில் எங்குமே மழை நீர் தேங்கவில்லை. அங்கு மழை நீரை சாலைகளில் துளையிட்டு அழகாக சேமிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சீனாவில் கோடைக்காலம் தொடங்கி 3 மாதம் ஆகிவிட்டது. அங்கு பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நம்ம ஊரில் அரை மணி நேரம் மழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கும்.
ஆனால் சீனாவில் 7 மணநேரம் மழை பெய்தும் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்கிறார் அங்கிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்.
இது தான் மக்களுக்கான நாடு#Velan_twitz pic.twitter.com/sUehQSepGX
— ஏழிசைவேலன் (@elisai_velan) July 3, 2019
இது தொடர்பாக அவர் தான் சீனாவில் இருந்து பேசுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோவில், சாலைகள் மிக அற்புதமாக காணப்படுகின்றன. அவர் காண்பித்த சாலை 25 வருடங்களுக்கு முன்பு போட்ட சாலை என கூறி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
அந்த சாலையில் ஒரு இடத்தில் கூட பள்ளம் இல்லை. குடிநீர் லைனுக்காக, டெலிபோன் லைனுக்காக எங்குமே தோண்டப்படவில்லை. அந்த சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்படுவது பார்க்கும் போதே தெரிந்தது.
அந்த சாலையில் ஆக்ரோசமாக கொட்டும் மழைத்துளிகள் அப்படியே நேராக மழை நீர் சேகரிப்புக்காக ஒவ்வொரு பத்து அடி தூரத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறு சிறு குழிகளில் அழகாக போய் சேருகின்றன. சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்யுதும் எங்குமே சாலையில் மழை தண்ணீர் தேங்கவில்லை என பெருமிதமாக தெரிவித்தார்.