அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா.. என்ன காரணம் தெரியுமா?
பீஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக உலக ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு விட்ட நிலையிலும் இன்னமும் கூட சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி சுமார் 10 மணி அளவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அசோசியேட் பிரஸ், பாக்ஸ் நியூஸ், சிஎன்என் உள்ளிட்ட சர்வதேச மற்றும் அமெரிக்க ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது.
ஜோ பிடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.
நரேந்திர மோடி வாழ்த்து
ஆனால் தான் தோற்று விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பல்வேறு நீதிமன்றங்களில் அந்தந்த மாகாணங்களின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பிடனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை
அதேநேரம் சீனா, ரஷ்யா, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ போன்ற நாடுகள் இதுவரை ஜோ பிடன் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. டிரம்ப் அதிபராக பதவி வகித்த போது, அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் வெடித்தது. சீனா நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்.
சீனா வைரஸ்
அதுமட்டுமா, கொரோனா நோய் பரவலின்போது, சீனா மீது நேரடியாக குற்றம் சாட்டிய உலகத் தலைவர்களில் ஒரு சிலரில் டொனால்டு டிரம்ப்பும் ஒருவர். அவர் சீனா வைரஸ் என்றுதான் அழைத்தார். இந்த வைரஸ் பரவலை அடிப்படையாகக்கொண்டு ஜோ பிடன் வெற்றிக்கு சீனா மறைமுகமாக உதவி வருவதாகவும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
மவுனம் காக்கும் சீனா
ஆனால், இப்போது ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள போதிலும், சீனா ஏனோ மவுனம் காக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென் பின், இதுபற்றி கூறுகையில், அமெரிக்காவின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் எப்போது வருகிறதோ அப்போதுதான் சீனா வாழ்த்து தெரிவிக்க முடியும். இப்போதைக்கு ஒரு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னமும் தேர்தல் முழுமையாக முடிவடையாததால் நாங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
ஜோ பிடனுக்கு உடனே வாழ்த்து தெரிவித்தால் அது டிரம்ப் தோல்வியை சீனா ஆசையோடு வரவேற்பது போன்று ஆகிவிடும். ஜோ பிடனுக்கு தேர்தலின்போது சீனா ஆதரவாக இருந்துள்ளது என்ற பிரச்சாரங்கள் வலு பெற்று விடும் என்பதற்காக, சீனா அமைதி காக்கிறது என்கிறார்கள். சிலரோ டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாக சீனாவுடன் நட்பு பாராட்டி வந்தார், எனவே சீனா, ஜோ பிடன் வெற்றியை ரசிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ, புதிய அதிபர் பதவி ஏற்ற பிறகு சீனாவுடன் எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்த திரைமறைவு விளையாட்டுக்கள் அம்பலமாகும்.