சீன தங்க சுரங்க வெடி விபத்து.. 14 நாட்களுக்குப் பின் நால்வர் பத்திரமாக மீட்பு
பெய்ஜிங்: சீன தங்க சுரங்க வெடி விபத்தில் சுமார் 14 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, பூமிக்கு அடியே சிக்கியிருந்த 22 நபர்களில் நால்வர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வட கிழக்கு மாகாணமாக ஷாண்டோங்வின் கடற்கரை நகரம் யான்டாய். இந்நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த 10ஆம் தேதி இங்குத் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்து காரணமாகச் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்போது சுரங்கத்திலிருந்த 22 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சீன அரசு மீட்புப் பணிகளைத் தொடங்கியது.
இந்த மீட்புப்பணிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், தற்போது சுரங்கத்திலிருந்து நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகச் சீனா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமாக உள்ளனர் என்றும் தற்போது அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் நால்வரை மீட்டுள்ளோம். பூமிக்கு அடியே சிக்கியுள்ள சிலருக்குத் துளை போட்டு உணவை இங்கிருந்து அனுப்பிவருகிறோம். பாறைகள் கடினமாக இருப்பதால் அவர்களை மீட்க இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகும்" என்றார்.
இதுவரை இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.